

தற்போது இந்திய சீனியர் அணியில் தலைமை பயிற்சியாளர் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. அனில் கும்ப்ளே அணி வீரர்கள் அறையில் ‘தலைமை ஆசிரியர்’ போன்று நடந்து கொள்கிறார், சீனியர் வீரர்களை அனுசரித்து செல்லவில்லை என்ற செய்தி அடிபட்டது.
இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது அனில் கும்ப்ளேவிற்கும், விராட் கோலிக்கும் இடையில் சுமுக உறவு இல்லை என்பது தெளிவாக தெரிந்தது. இதற்கிடையே கும்ப்ளே தனது ஒரு வருட கால பதவிக்காலம் முடிந்த பின்னர், அப்பதவியில் நீடிக்க விரும்பாமல் விலகினார்.
அவரது விலகலுக்கு விராட் கோலிதான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் விராட் கோலிக்கு எதிராக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயன்காவின் சகோதரரான ஹர்ஷ் கோயன்கா, விராட் கோலியையும், தலைமை பயிற்சியாளருக்கான தகுதி குறித்தும் கிண்டலடித்துள்ளார்.
இதுகுறித்து கோயன்கா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘ப்ளீஸ். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பியுங்கள். அதற்கான தகுதி: 1. பயண அட்டவணையை ஒருங்கிணைக்க வேண்டும். 2. ஓட்டல் அறைகளை ஒதுக்கி கொடுக்க வேண்டும் 3. பிசிசிஐ மற்றும் இந்திய அணி கேப்டனுக்கு அடிபணிந்து நடக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.