

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் பொதுமக்கள் மீது கத்தியால் சரமாரியாக தாக்குதல் நடத்திவனை தைரியமாக மடக்கிப்பிடித்த பொதுமக்களுக்கு அந்நாட்டு வேந்தர் ஏஞ்சலா மெர்கல் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியின் ஹம்பர்க் நகரின் அருகே உள்ள பார்ம்பெக் பகுதியில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் அதிகமான பொதுமக்கள் குவிந்திருந்தனர். அப்போது, அங்கு திடீரென மர்மநபர் ஒருவர் தான் கொண்டு வந்திருந்த கத்தியால் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கினார்.
இந்த தாக்குதலில் 7 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் சுதாரித்து மர்மநபரை மடக்கிப்பிடித்தனர். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 50 வயதான ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தாக்குதலில் ஈடுபட்ட மர்மநபர் பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர் என்றும் துபாய் வழியாக 2015-ம் ஆண்டில் ஜெர்மனிக்கு வந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.