நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ பதவி ராஜினாமா எப்போது? - எச்.வசந்தகுமார் பதில்

நாங்குநேரி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வது எப்போது? என்பது குறித்து எச்.வசந்தகுமார் பதில் அளித்தார்.
நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ பதவி ராஜினாமா எப்போது? - எச்.வசந்தகுமார் பதில்
Published on

சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் எச்.வசந்தகுமார், கடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். இந்தநிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில் காங்கிரசும் இடம்பெற்றது. இதில் கன்னியாகுமரி தொகுதியில் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதையடுத்து எச்.வசந்த குமார் இனி எம்.பி. அடையாளத்துடன் மக்களவைக்கு செல்ல இருக்கிறார். எனவே அவர் ஏற்கனவே வகித்து வரும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்து உள்ளார்.

இந்தநிலையில் புதிய எம்.பி. யாக தேர்வான எச்.வசந்தா குமார், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு நேற்று வந்தார். அங்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது கன்னியாகுமரி தொகுதியில் மகத்தான வெற்றி பெற்றதற்காக எச்.வசந்தகுமாருக்கு, மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து வெளியே வந்த எச்.வசந்த குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “எம்.பி. பதவியை தக்க வைத்துக்கொள்வது என்றும், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வது என்ற முடிவை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். சபா நாயகர் இருக்கும்பட்சத்தில் நாளைக்கே சென்று எனது ராஜினாமா கடிதத்தை கொடுத்து, டெல்லி செல்லலாம் என்று நினைக்கிறேன்”, என்றார்.

எம்.எல்.ஏ. பதவியை எச்.வசந்தகுமார் ராஜினாமா செய்ய உள்ளதால் அங்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. தற்போது இந்த ராஜினாமாவால் தி.மு.க. கூட்டணியின் பலம் 109 ஆக குறைகிறது. நாங்குநேரி தொகுதியை மீண்டும் தி.மு.க. ஆதரவுடன் கைப்பற்ற காங்கிரஸ் முனைப்பாக உள்ளது. ஆளும் கட்சியான அ.தி.மு.க.வும் நாங்குநேரியில் வெற்றி பெற வியூகம் வகுத்து வருகிறது. அதேவேளை தி.மு.க.வும் போட்டியிட வாய்ப்பிருப்பதாக தி.மு.க.வினர் பேசிக்கொள்கிறார்கள். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com