

திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில், செவ்வாப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் தொட்டிக்கலை அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக சென்னையிலிருந்து திருவள்ளூர் நோக்கி வந்த ஒரு காரை நிறுத்த முயன்றனர். அப்போது அவர்கள் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றதால், சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அப்போது காரில் இருந்தவர்கள் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்து உருட்டுக்கட்டையால் தாக்க முயன்றனர்.
பின்னர் சுதாரித்து கொண்ட போலீசார் அந்த காரை சோதனை செய்த போது, உள்ளே இருந்த ஒரு கோணிப்பையில் 950 குட்கா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, திருநின்றவூரை சேர்ந்த ஓம் பிரகாஷ் (வயது 26), அசோக் (26), அரவிந்தன் (30) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அந்த காரில் இருந்த ரூ.12 ஆயிரத்து 500 மற்றும் 2 செல்போன்களையும், குட்கா பொருட்களை கடத்த பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.