காந்திநகர்:
குஜராத் சட்டசபை தேர்தலில் இன்று முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை சரியாக 8 மணிக்கு தொடங்கியது. பெண்கள் மற்றும் இளைஞர்கள் காலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகளை உள்ளடக்கிய பகுதியில் நடைபெறும் முதற்கட்ட தேர்தலில் 57 பெண்கள் உள்பட 977 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில், பா.ஜ.க. சார்பில் முதல்வர் விஜய் ரூபானி ராஜ்கோட் மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான புஜாரா இன்று காலை தனது வாக்கை பதிவு செய்தார். சவுராஷ்டிரா பகுதியைச் சேர்ந்த இவர் ராஜ்கோட்டில் உள்ள ரவி வித்யாலாயா வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
வாக்களிப்பது மக்களின் ஜனநாயக கடமையாகும். அதன்படி காலைமுதல் பொதுமக்கள் அனைவரும் விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர்.