குட்கா ஊழல் வழக்கு - வருமான வரித்துறை விசாரணை முடிகிறது

குட்கா ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையை முடித்துக் கொள்ள வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. #GutkhaScam #IncomeTax
குட்கா ஊழல் வழக்கு - வருமான வரித்துறை விசாரணை முடிகிறது
Published on

புதுடெல்லி:

தமிழ்நாட்டில் தடையை மீறி குட்கா விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கப்படுவதாக வந்த தகவல்களின் பேரில் கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை செங்குன்றத்தில் உள்ள குட்கா குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதன் மூலம் குட்கா விற்பனையில் மிகப் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்து இருப்பது தெரிய வந்தது.

ஆவணங்களை ஆய்வு செய்தபோது சுமார் ரூ.250 கோடி அளவுக்கு குட்கா நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்து இருப்பதை வருமான வரித்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதையடுத்து அவர்கள் மீதும் விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதற்கிடையே சோதனையின்போது சிக்கிய ரகசிய டைரி மூலம் குட்கா விற்பதற்கு அமைச்சர், உயர் போலீஸ் அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகளுக்கு ரூ.40 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கும் வருமான வரித்துறை கடிதம் அனுப்பியது.

தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் திருப்தி அளிக்காததால் குட்கா முறைகேடுகள் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் பேரில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி 6 பேரை கைது செய்தது.

இந்த நிலையில் வருமான வரித்துறையினர் குட்கா தொடர்பான முறைகேடுகளை விசாரித்து வந்தனர். தற்போது இந்த விசாரணையை முடித்துக் கொள்ள வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

வருமான வரித்துறை சட்டப்படி இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதிக்குள் குட்கா வழக்கை முடிக்க வேண்டிய நிலை வருமான வரித்துறைக்கு ஏற்பட்டுள்ளது. எனவே 2016-ம் ஆண்டு சோதனையின் போது சிக்கிய ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் கொடுத்து விட வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

சோதனையின்போது பணம் மற்றும் சொத்து ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி இருந்தனர். அந்த சொத்து ஆவணங்கள் அனைத்தையும் வரி ஏய்ப்புக்கு ஈடுகட்டும் வகையில் பயன்படுத்த வருமான வரித்துறையினர் தீர்மானித்துள்ளனர். #GutkhaScam #IncomeTax

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com