குட்கா ஊழல்: ஜெயலலிதாவின் முன்னாள் செயலாளர் வெங்கடரமணன் விளக்கம் அளிக்க உத்தரவு

குட்கா ஊழல் கோப்பு மாயம்: ஜெயலலிதாவின் முன்னாள் செயலாளர் வெங்கடரமணன் விளக்கம் அளிக்க வேண்டும் லஞ்ச ஒழிப்பு துறை உத்தரவு
குட்கா ஊழல்: ஜெயலலிதாவின் முன்னாள் செயலாளர் வெங்கடரமணன் விளக்கம் அளிக்க உத்தரவு
Published on

சென்னை:

ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போது தலைமை செயலாளராக இருந்த ராமமோகனராவை வருமான வரித்துறை முதன்மை இயக்குனர் பி.ஆர்.பால கிருஷ்ணன் சந்தித்து குட்கா ஊழல் தொடர்பாக முக்கிய கடிதம் ஒன்றை கொடுத்திருந்தார்.

அந்த கடிதத்தில் சில அமைச்சர்கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் 2 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் இதுபற்றி அரசின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இது சம்பந்தமாக உள் துறை செயலாளருக்கு அந்த கடிதத்தை அனுப்பி இது தொடர்பாக விசாரிக்கும்படி கூறியதாக ராமமோகனராவ் சமீபத்தில் பேட்டியில் கூறி இருந்தார்.

ஆனால் அந்த சமயத்தில் ஜெயலலிதாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அதன் மீது தொடர் நடவடிக்கை எடுக்க முடியாமல் போய் விட்டதாகவும் வருமான வரித்துறை அதிகாரியின் அந்த கடிதம் இப்போது காணாமல் போய் விட்டதாகவும் அவர் கூறி இருந்தார்.

ராமமோகனராவின் இந்த குற்றச்சாட்டு அதிகாரிகள் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அப்போது உள்துறை செயலாளராக இருந்த அபூர்வ வர்மா, அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், ஜெயலலிதாவின் செயலாளராக இருந்த கே.என். வெங்கடரமணன் ஆகியோரிடம் கோப்பு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு லஞ்ச ஒழிப்பு துறை சில கேள்விகளை கேட்டுள்ளது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com