மெக்சிகோ எல்லை வழியாக சென்ற அகதி: அமெரிக்க காவலில் சிறுமி சாவு

மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவினுள் நுழைந்த கவுதமாலா நாட்டைச் சேர்ந்த அகதிகளில் 7 வயது சிறுமி ஒருத்தி அமெரிக்க காவலில் இருந்தபோது பரிதாபமாக மரணம் அடைந்தாள்.
மெக்சிகோ எல்லை வழியாக சென்ற அகதி: அமெரிக்க காவலில் சிறுமி சாவு
Published on

வாஷிங்டன் :

ஹோண்டுராஸ், கவுதமாலா, எல் சல்வடார் போன்ற மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள், தங்கள் நாட்டில் நிலவுகிற வறுமை, வன்முறை, துன்புறுத்தல் போன்றவற்றின் காரணமாக அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

அவர்கள் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவினுள் நுழைந்து அகதிகளாக தஞ்சம் கேட்க முடியாதபடிக்கு ஜனாதிபதி டிரம்ப் நிர்வாக உத்தரவு போட்டார். ஆனால் அதற்கு, சான்பிரான்சிஸ்கோ கோர்ட்டு தடை போட்டது. இருப்பினும் அமெரிக்காவினுள் நுழைகிற மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த வாரம் கவுதமாலா நாட்டைச் சேர்ந்தவர்கள் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவினுள் நுழைந்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 7 வயது சிறுமி ஒருத்தியும், அவளது தந்தையும் அடங்குவர்.

ஆனால் அந்த சிறுமி அமெரிக்க காவலில் இருந்தபோது பரிதாபமாக மரணம் அடைந்தாள். அவள் பல நாட்களாக உணவோ, தண்ணீரோ கிடைக்காத நிலையில்தான் மரணம் அடைந்திருக்கிறாள் என்ற நெஞ்சை உலுக்கும் தகவலை எல்லை அதிகாரிகள் கூறியதாக செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.

இருப்பினும் அந்தச் சிறுமியின் மரணம் குறித்து அமெரிக்க அதிகாரிகள் முறைப்படி அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. இந்த சம்பவம், அகதிகள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com