பிரிட்ஜ், வாஷிங்மெஷின் மீதான ஜி.எஸ்.டி. வரி குறைகிறது

பெண்களை கவரும் வகையில் பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏர்கண்டி‌ஷன் ஆகியவற்றின் ஜி.எஸ்.டி. வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பிரிட்ஜ், வாஷிங்மெஷின் மீதான ஜி.எஸ்.டி. வரி குறைகிறது
Published on

அனைத்து மாநிலங்களிலும் ஒரே சீரான வரி இருக்கும் வகையில் ஜி.எஸ்.டி. வரி முறை கொண்டு வரப்பட்டது. இதில் குறைந்த பட்சமாக 5 சதவீதமும், அதிக பட்சமாக 28 சதவீதமும் வரி நிர்ணயம் செய்யப்பட்டது.

ஆனால் மக்கள் அத்தியாவசியமாக பயன்படுத்தும் பல பொருட்களுக்கும் 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வந்தது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் பல்வேறு பொருட்களின் வரியை மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

கடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் அசாம் மாநிலம் கவுத்தியால் நடைபெற்றது. அப்போது 28 சதவீதம் வரிகள் விதிக்கப்பட்டிருந்த 178 பொருட்களின் வரியை குறைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.

இதே போல 18 சதவீதம், 12 சதவீதம் இருந்த வரிகளும் மாற்றி அமைக்கப்பட்டன. ஓட்டல் பண்டங்கள் வரி வெகுவாக குறைக்கப்பட்டது.

ஆனாலும் வீடுகளில் பயன்படுத்தும் பிரிட்ஜ், வாஷிங்மெஷின், வேக்குவம் கிளீனர், ஏர்கண்டி‌ஷன் போன்றவற்றின் வரி தொடர்ந்து 28 சதவீதமாக உள்ளது.

இந்த பொருட்களை பெண்கள் தான் வீடுகளில் பயன்படுத்துவது வழக்கம். இவற்றின் வரி அதிகமாக இருப்பதால் பெண்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.

இதை சரிசெய்யும் விதமாக இவற்றின் வரியையும் குறைக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

அடுத்த ஜி.எஸ்.சி. கவுன்சில் கூட்டம் நடக்கும் போது வரி குறைப்பு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல வீடுகளில் அத்தியாவசியமாக பயன்படுத்தும் பல பொருட்களுக்கு 12 சதவீதம், 18 சதவீதம் என வரி உள்ளது. அவற்றையும் குறைக்க திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கனவே ஜி.எஸ்.டி. வரியில் மாற்றம் செய்யப்பட்டதால் சுமார் 20 ஆயிரம் கோடி வரி இழப்பு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.

இப்போது மேலும் பல பொருட்களின் வரியை குறைக்க உள்ளதால் அதிக இழப்புகள் ஏற்படும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com