குரூப்-4 தேர்வு முறைகேடு- 5 மாவட்டங்களில் விசாரணையை விரிவுபடுத்தியது சிபிசிஐடி

குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 5 மாவட்டங்களில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை விரிவுபடுத்தி உள்ளனர். விசாரணையில், நெல்லையைச் சேர்ந்த ஒரு இடைத்தரகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி அலுவலகம்
டிஎன்பிஎஸ்சி அலுவலகம்
Published on

சென்னை:

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு பூதாகரமாக வெடித்துள்ளது. இடைத்தரகர்கள் மற்றும் அதிகாரிகள் மூலம் முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ராமேஸ்வரம், கீழக்கரை தாசில்தார்கள், இடைத்தரகர்கள் உள்ளிட்ட 10 பேர் ஏற்கனவே சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதேபோல் மற்ற பகுதிகளில் உள்ள அதிகாரிகளுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

அவ்வகையில், இன்று கடலூர், சிவகங்கை, தஞ்சை, நெல்லை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் விசாரணையை விரிவுபடுத்தினர். இந்த விசாரணையின்போது கடலூர் மாவட்டம் சிறுகிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்ற இடைத்தரகரை கைது செய்தனர். நெல்லையைச் சேர்ந்த மற்றொரு இடைத்தரகரான ஐயப்பன் என்பவர் சென்னையில் சிக்கினார். அவரிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது. 

சென்னையில் சிக்கிய ஐயப்பன், தனது உறவினர்கள் இரண்டு பேருக்கு விஏஓ பணி வாங்கி தந்ததாகவும், குரூப் 2 தேர்வின் மூலம் ஒரு பெண்ணுக்கு அரசு வேலை வாங்கி கொடுத்ததாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. 

இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேரிடம் சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com