திருப்புல்லாணி அருகே மீண்டும் நில விரிசல்: பொதுமக்கள் பீதி

திருப்புல்லாணி அருகே இன்று காலை சில மீட்டர் தூரத்துக்கு நிலத்தில் விரிசல் ஏற்பட்டது. 2-வது நாளாக இன்றும் விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருப்புல்லாணி அருகே மீண்டும் நில விரிசல்: பொதுமக்கள் பீதி
Published on

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே உள்ள வளையனேந்தல் பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சார்பில் எரிவாயு கிணறுகள் தோண்டப்பட்டு எரிவாயு எடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வப்போது இந்த பகுதியில் ராட்சத எந்திரங்கள் மூலம் நிலத்தில் பல அடி தூரம் துளையிடப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் வளையனேந்தல் காமாட்சியம்மன் கோவில் அருகே காட்டு நாயக்கர் குடியிருப்பு பகுதியில் திடீரென நிலத்தில் 30 மீட்டர் தூரத்துக்கு விரிசல் ஏற்பட்டது.

மேலும் சில வீடுகளின் சுவரிலும் விரிசல் இருந்தது. இதனால் பீதியடைந்த அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறி விட்டு வெளியில் சமையல் செய்தனர்.

நில விரிசல் குறித்து தகவலறிந்த அதிகாரிகள், கனிம வளத்துறையினர் அங்கு வந்து ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை மீண்டும் அதே பகுதியில் ஆங்காங்கே சில மீட்டர் தூரத்துக்கு நிலத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினர். 2-வது நாளாக இன்றும் விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இயற்கை எரிவாயு எடுப்பதால் தான் விரிசல் ஏற்பட்டது என அப்பகுதி மக்கள் புகார் கூறினர். மேலும் புவியியல் ஆய்வாளர்கள் மூலம் உரிய ஆய்வு நடத்தி இதற்கான காரணத்தை கண்டறியவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com