கிரானைட் மோசடி வழக்கு: பி.ஆர். பழனிச்சாமி- 38 பேர் மீது 697 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

கிரானைட் மோசடி தொடர்பாக 718 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக பி.ஆர். பழனிச்சாமி உள்பட 39 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கிரானைட் மோசடி வழக்கு: பி.ஆர். பழனிச்சாமி- 38 பேர் மீது 697 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
Published on

மேலூர்:

மதுரை மாவட்டம், மேலூர், கீழவளவு, மேல வளவு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கிரானைட் கற்களை அனுமதியின்றி வெட்டி எடுத்தல், அரசு புறம்போக்கு இடங்களில் பதுக்கி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் நடந்ததாக புகார்கள் வந்தன.

இதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் பி.ஆர். கிரானைட்ஸ் அதிபர் பி.ஆர். பழனிச்சாமி உள்பட பல்வேறு கிரானைட் நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மேலூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் இதுவரை 75 வழக்குகளில் குற்றப்பத்திரிகை மேலூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரசு வக்கீல் ஷீலா, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு குருசாமி, இன்ஸ்பெக்டர்கள் ராஜா சிங், பிரகாஷ் ஆகியோர் இன்று மேலூர் கோர்ட்டில் 697பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

அதில், கீழவளவு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சருகுவளையபட்டி நல்லிகுளம் கண்மாயில் அரசு புறம்போக்கு நிலத்தில் கிரானைட் கற்களை பதுக்கியதாக எம்.எஸ். கிரானைட், ஐஸ்வர்யா ராக் எக்ஸ்போர்ட்ஸ், சங்கர நாயாரணன் உள்பட 14 பேர் மீது புகார் கூறப்பட்டிருந்தது.

அவர்கள் ரூ. 717 கோடியே 52 லட்சம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதேபோல் மேலூர் போலீஸ் சரகம் திருவாதவூர் கிராமம், ஆரனன் துலுவன் கண்மாய், சூரக்குண்டு கண்மாய், மண்குளம் கண்மாய், இலுப்பக்குடி கால்வாய் ஆகிய பகுதிகளில் தண்ணீர் வரும் பாறைகளை சேதப்படுத்தி அரசுக்கு ரூ. 83 லட்சத்து 60 ஆயிரம் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக பி.ஆர். பழனிச்சாமி உள்பட 25 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com