பெரம்பலூர் மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டம்

தொழிலாளர் தினத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டம்
Published on

வேப்பந்தட்டை:

மே தினத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் 121 ஊராட்சிகளிலும் கிராம சபைகூட்டம் நடைபெற்றது. வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். அப்போது ஊராட்சி பகுதிகளில் நடைபெற்ற வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. அதனைத்தொடர்ந்து பொதுமக்களிடம் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை கிராம சபையில் தெரிவிக்குமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் குடிநீர், மின்விளக்கு, பொது சுகாதார வளாகம் உள்ளிட்ட தேவைகளை கோரினர். பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முடிந்த திட்டங்களை காலம் தாழ்த்தாது செயல்படுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் பாரதிதாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆலத்தூர் ஒன்றியம் சிறுகன்பூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி அழகர்சாமி தலைமை தாங்கினார். ஆலத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கர்ணன் முன்னிலை வகித்தார். சமூக நலத்திட்டங்கள் குறித்து ஆலத்தூர் தாலுகா சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தார் ஷாஜகான், வட்டார ஊட்டச்சத்து அலுவலர் பூமாதேவி, ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தயாளன் ஆகியோர் மத்திய, மாநில அரசின் திட்டங்கள் குறித்து பேசினர். கூட்டத்தில் குடிநீரை சிக்கனமாக பயன் படுத்துதல், திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்த்தல், சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்டவைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் அகரம்சீகூர் சுமதி, அத்தியூர் முருகதாஸ், திருமாந்துறை வீரமணி, பெண்ணக்கோணம் சுதா உள்ளிட்ட ஊராட்சி செயலாளர்கள் தலைமையில் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது. ஒகளூர் மற்றும் ஆடுதுறையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் சரிவர குடிநீர் வினியோகம் செய்யாததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த கூட்டங்களில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அந்த அந்த கிராமங்களில் அப்பகுதிகளுக்கேற்ற வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அத்தகைய திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் அரசு தயக்கமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில், மோகன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சட்டநாதன், சேகர், பணிமேற்பார்வையாளர் செல்வி உள்பட ஊராட்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள், மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com