விருத்தாசலம் அருகே காதலியை திருமணம் செய்ய மறுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது

விருத்தாசலம் அருகே காதலியை திருமணம் செய்ய மறுத்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைது
கைது
Published on

விருத்தாசலம்:

விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள மருங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அர்ச்சனா (வயது 25). எம்.எஸ்.சி பட்டதாரி.

இவர் விருத்தாசலம் அருகே உள்ள ஒரு கல்லூரியில் பி.எட் படித்து வருகிறார். இந்நிலையில் இவரும் கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் கோவிந்தராஜ் (30), என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இது குறித்து அறிந்ததும் அர்ச்சனாவை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் அர்ச்சனா கோவிந்தராஜை தன்னை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி உள்ளார். ஆனால் அவர் திருமணம் செய்ய மறுத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அர்ச்சனா காவனூர் கிராமத்தில் உள்ள ஆசிரியர் கோவிந்தராஜ் வீட்டின் முன்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது கோவிந்தராஜ் வீட்டில் இருந்தவர்கள் வீட்டைப்பூட்டிவிட்டு வெளியில் சென்று விட்டனர்.

அப்போது அர்ச்சனா எனக்கு வாழ்வு கிடைக்கும் வரை நான் இங்கு தான் இருப்பேன். கோவிந்தராஜ் என்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் இங்கேயே தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறினார். இச்சம்பவம் குறித்து அறிந்த விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் அர்ச்சனாவை அழைத்துச் சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து அர்ச்சனா கொடுத்த புகாரின் பேரில் கோவிந்தராஜ் மீது வழக்குப்பதிவு செய்தனர். கோவிந்தராஜ் தலைமறைவாக இருந்ததால் போலீசார் அவரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் உறவினர் ஒருவர் வீட்டில் பதுங்கியிருந்த கோவிந்தராஜை விருத்தாசலம் உட்கோட்ட குற்றப்பிரிவு போலீசார் பிடித்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். கோவிந்தராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com