விழுப்புரம் அருகே அரசு பஸ்சில் மது பாட்டில்கள் கடத்திய டிரைவர்- கண்டக்டர் கைது

விழுப்புரம் அருகே அரசு பஸ்சில் டிரைவர் மற்றும் கண்டக்டர் மதுப்பாட்டில்கள் கடத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே அரசு பஸ்சில் மது பாட்டில்கள் கடத்திய டிரைவர்- கண்டக்டர் கைது
Published on

மரக்காணம்:

புதுவையில் இருந்து விழுப்புரம் மாவட்டம் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு மதுப்பாட்டில்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சோதனை சாவடிகளில் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்து வருகிறார்கள்.

விழுப்புரம் அருகே உள்ள கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பெரியமுதலியார் சாவடியில் போலீசார் இன்று அதிகாலை 4 மணிக்கு மதுவிலக்கு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் அந்த பகுதியில் வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது புதுவையில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ் ஒன்று வேகமாக வந்தது. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர்.

அந்த பஸ்சில் அனுமதியில்லாத வெளிமாநில மதுப்பாட்டில்கள் அட்டைப் பெட்டியில் பதுக்கி வைக்கப்பட்டது தெரியவந்தது. அதில் 200 மதுப்பாட்டில்கள் இருந்தன.

இதனை தொடர்ந்து போலீசார் செங்கல்பட்டை சேர்ந்த பஸ் டிரைவர் வெங்கடேசன் (வயது 40), கண்டக்டர் பாலாஜி (33) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணான பதில் கூறினார்கள்.

இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி கைது செய்தனர்.

மேலும் அரசு பஸ்சில் கடத்தப்பட்ட 200 மதுப்பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும்.

அரசு பஸ்சில் மதுப்பாட்டில்கள் கடத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com