

புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் ‘ஸ்வத்சா கார்ப்பரேஷன்’ என்ற அமைப்பின் மூலம் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காக உலக சுகாதார தினத்தையொட்டி ஜிப்மர் சமுதாய நல கூடத்தில் மருத்துவ முகாம் நடந்தது.
அதன் தொடக்க நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பேடி கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து துப்புரவு தொழிலாளர்களுக்கு சுகாதார அட்டைகளை வழங்கினார்.
அதை பெற்றுக் கொண்ட சுகாதார பெண் தொழிலாளி ஒருவர் கவர்னருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவரது காலை தொட்டு வணங்கினார்.
அப்போது யாரும் எதிர்பாராத வகையில் பதிலுக்கு கவர்னர் கிரண் பேடி அந்த பெண் தொழிலாளியின் காலை தொட்டு வணங்கினார். கவர்னரின் இந்த செய்கை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது.
கிரண்பேடி புதுவை மாநில கவர்னராக பதவி ஏற்ற நாளில் அவரது காலை தொட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான விஜயவேணி வணங்கினார். அப்போது விழா மேடையிலேயே பதிலுக்கு கவர்னர் கிரண்பேடியும் விஜயவேணி எம்.எல்.ஏ.வின் காலை தொட்டு வணங்கினார்.
அது முதல் யார் தனது காலில் விழுந்து வணங்கினாலும் பதிலுக்கு அவர்களது காலை தொட்டு வணங்குவதை கவர்னர் கிரண்பேடி வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.