துணை வேந்தர்கள் மீதான வழக்கு வேதனை அளிக்கிறது- கவர்னர் பன்வாரிலால் பேச்சு

துணை வேந்தர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது ஊழல் வழக்கு தொடர்ப்படுவது தனக்கு கவலை அளிக்கிறது என்று கவர்னர் பன்வாரிலால் பேசியுள்ளார்.
கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசிய காட்சி.
கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசிய காட்சி.
Published on

உதகமண்டலம்:

உதக மண்டலத்தில் நடைபெறும் உயர்கல்வி மாநாட்டை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று தொடங்கி வைத்தார். அப்போது பேசியதாவது:-

பொதுமக்களே நாட்டின் மன்னர்கள் என்ற மக்களாட்சியின் உண்மையான சாராம்சத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நல்லவர்களாக இருப்பதைக் காட்டிலும் நல்ல பண்பாளர்களாக இருப்பது சாலச்சிறந்ததாகும். நன்மை தீமைகளை ஆய்ந்தறிந்து, நன்மையினைச் சார்ந்திருப்பது, நல்ல பண்பாளர்களாக இருப்பதற்கான முதல் படியாகும்.

கல்வியைக் கற்றுத்தரும் கல்லூரிகள், நற்பண்புகளை வளர்ப்பதற்கும், மாணவர்களிடையே நாட்டுப்பற்றினை மனதில் பதிய வைப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உயர் கல்வியின் வளர்ச்சி மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளது. மாநில ஆளுநர் மற்றும் வேந்தராக பதவி ஏற்ற நேரத்தில், மாநிலத்தில் உள்ள 20 பல்கலைக்கழகங்களில் 6 பல்கலைக்கழகங்களுக்கு தலைமை இல்லாது, துணை வேந்தர் நியமிக்கப்படாமல் உள்ளதன் காரணமாக அவற்றின் நிருவாகப்பணிகள் பாதிக்கப்பட்டிருந்தது.

சில பல்கலைக்கழகங்களில், துணை வேந்தர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபரின் தரம் மற்றும் தேர்வு செயல்பாடுகள் குறித்து ஊடகங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இரண்டு முன்னாள் துணை வேந்தர்களின் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைசோதனை, பதவியிலிருந்த துணை வேந்தர் கைது செய்யப்பட்டது மற்றும் கடந்த 2 ஆண்டுகளில் முன்னாள் பதிவாளரின் தற்கொலை ஆகிய நிகழ்வுகள் நிலைமைக்கு சாட்சிகள் உள்ளன. துணை வேந்தர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது ஊழல் வழக்கு தொடர்ப்படுவது எனக்கு கவலை அளிக்கிறது. இது நம்முடைய நாகரீகத்தின் மீதுள்ள கறையாகும். இது ஒரு போதும் நிகழக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள 20 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com