கன்னியாகுமரிக்கு 6-ந்தேதி கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகை

கன்னியாகுமரிக்கு 6-ந்தேதி வருகை தரும் கவர்னர் பன்வாரிலால் புரோகித், விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிடுகிறார். அங்குள்ள தியான மண்டபத்தையும் பார்க்கிறார்.
கன்னியாகுமரிக்கு 6-ந்தேதி கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகை
Published on

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்.

இவர் பொறுப்பேற்று கொண்டபின்பு முதல்முறையாக வருகிற 6-ந்தேதி நெல்லை மாவட்டம் வருகிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபின்பு அன்று இரவு குமரி மாவட்டம் வருகிறார்.

கன்னியாகுமரிக்கு வருகை தரும் அவரை மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வரவேற்கிறார்கள். அன்று இரவு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

மறுநாள் 7-ந்தேதி அதிகாலை கவர்னர் பன்வாரிலால் புரோகித் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.

பின்னர் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும் சென்று பார்வையிடுகிறார். அங்குள்ள தியான மண்டபத்தையும் பார்க்கிறார்.


இதை தொடர்ந்து சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலய சுவாமி கோவிலுக்கு செல்கிறார். அங்கு சாமி தரிசனம் செய்தபின்பு, அனுமன் சன்னதிக்கும் செல்கிறார்.

இந்நிகழ்ச்சி முடிந்த பின்பு அவர் மீண்டும் கன்னியாகுமரி செல்கிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்பு மாலையில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னை புறப்படுகிறார்.

கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஏற்கனவே கோவை சென்ற போது அங்கு அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். அது போல கன்னியாகுமரி வரும்போதும் அவர் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. நேற்று மாலை கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கவர்னர் வருகையையொட்டி கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. விவேகானந்தர் பாறை, பகவதி அம்மன் கோவில் மற்றும் விருந்தினர் மாளிகையில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com