

பெரம்பலூர்:
பெரம்பலூரில் அனைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் துறைமங்கலத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசு போக்குவரத்து கழகத்தை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சிக்கும் அரசின் செயல்பாடுகளை கண்டித்தும், இதில் 288-ஏ என்ற அரசாணையை நீக்க கோரியும், வழித்தடத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், பிடித்தம் செய்யப்பட்ட விடுமுறை கால சம்பளத்தை திரும்ப வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பணப்பலனை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரெங்கசாமி, சி.ஐ.டி.யு. மாவட்ட பொறுப்பாளர் சிங்கராயர், ஏ.ஐ.டி.யு.சி. கிளை தலைவர் கோவிந்தராஜ், பணியாளர் சம்மேளன கிளை செயலாளர் குணசேகரன் மற்றும் அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.