நிதி கமிஷனின் வரம்பு மாற்றம் : முதல்-மந்திரிகளின் கருத்தை கேட்க வேண்டும் - மன்மோகன் சிங் கருத்து

மத்திய அரசு நிதிக்கமிஷனின் ஆய்வுரிமை மரபை மாற்ற விரும்பினால் முதல்-மந்திரிகள் மாநாட்டை கூட்டி மாநிலங்களின் கருத்தை கேட்க வேண்டும் என மன்மோகன்சிங் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
Published on

புதுடெல்லி:

மத்திய அரசு, என்.கே.சிங் தலைமையிலான 15-வது நிதிக்கமிஷனை மாநிலங்களுக்கு 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிதி ஒதுக்கும் வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கும்படி கேட்டுக்கொண்டது. இந்த ஆண்டு அக்டோபர் 30-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படியும் கேட்டுக்கொண்டது. பின்னர் இந்த காலக்கெடு நவம்பர் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு 15-வது நிதிக்கமிஷனின் ஆய்வுரிமை வரம்பை மாற்றியது. மேலும் ராணுவம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்புக்கு காலவரம்பற்ற நிதி ஒதுக்குவதற்கான வழிமுறைகள் பற்றிய ஆலோசனைகளை வழங்கும்படியும் கேட்டுக்கொண்டது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற 15-வது நிதி கமிஷனின் கூடுதல் ஆய்வுரிமை வரம்பு பற்றிய தேசிய கருத்தரங்கத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, மத்திய அரசு நிதிக்கமிஷனின் ஆய்வுரிமை மரபை மாற்ற விரும்பினால் முதல்-மந்திரிகள் மாநாட்டை கூட்டி மாநிலங்களின் கருத்தை கேட்க வேண்டும். மத்திய அரசு தன்னிச்சையாக தனது கருத்தை நடைமுறைப்படுத்துவதை விட்டுவிட்டு, மாநில கமிஷன்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

பெரும்பாலான மாநிலங்கள் தங்கள் தேவைகளுடன் ஏற்கனவே நிதிக்கமிஷனை அணுகி உள்ளன. இப்போது மத்திய அரசு கூடுதல் ஆய்வுரிமை வரம்புகளை நிதிக்கமிஷன் மீது திணித்தால் அது செயல்படுவதில் சிக்கலை ஏற்படுத்திவிடும். அது நிச்சயமாக கூட்டாட்சி தத்துவத்துக்கு நல்லதல்ல என்றும் மன்மோகன்சிங் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com