தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவனை கடத்தி சித்ரவதை

அரசு பள்ளி மாணவனை கடத்தி சித்ரவதை செய்ததில் காயம் அடைந்த அவன் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான்.
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவனை கடத்தி சித்ரவதை
Published on

முள்ளக்காடு:

தூத்துக்குடி முத்தையாபுரம் கீதாநகரை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் சொந்தமாக என்ஜினீயரிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 14). இவன் ஸ்பிக்நகர் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.

இதே பள்ளியில் அமிஸ் எபன் (14) என்ற மாணவனும் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது சதீஷ்குமாரும், அமிஸ் எபன்னும் சண்டையிட்டுள்ளனர்.

பின்னர் மறுநாள் சைக்கிளில் வரும் போது எதிர் பாராதவிதமாக ஒருவருடன் ஒருவர் உரசி இருவரும் கீழே விழுந்துள்ளனர். இதில் அமிஸ் எபனின் சைக்கிள் முன்பகுதி சேதம் அடைந்துள்ளது. இதனை வீட்டிற்கு சென்றதும் தனது தந்தையிடம் கூறியுள்ளான். இதை கேட்டு அவனது தந்தை ஆத்திரமடைந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 11-ந் தேதி பள்ளி முடிந்து சதீஷ்குமார் வீடு திரும்பி கொண்டிருந்தான். அப்போது அமிஸ் எபனின் தந்தை, மாணவன் சதீஷ்குமாரை தாக்கி தனது பைக்கில் கடத்தி உள்ளார்.

பின்னர் கனநீர் ஆலை ஊழியர் குடியிருப்பான ஹெவி வாட்டர் காலனியில் உள்ள தனது வீட்டிற்கு கடத்தி சென்றார். மேலும் மாணவனை அவர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

அப்போது அங்கு வந்த மாணவன் சதீஷ்குமாரின் தந்தை பாலமுருகன் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து தட்டிக் கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவனை வெளியே அனுப்பி கதவை அடைத்தார்.

இதில் காயம் அடைந்த மாணவன் சதீஷ் குமார் தனக்கு வயிறு வலிப்பதாக கூறியதால் அவனை தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.

X

Maalai Malar
www.maalaimalar.com