கோவை, திருப்பூர் மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் 800 பேர் வேலை நிறுத்த போராட்டம்- பொதுமக்கள் அவதி

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் 800 டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.#DoctorsProtest
கோவை அரசு ஆஸ்பத்திரி புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகள் வரிசையில் நின்ற காட்சி
கோவை அரசு ஆஸ்பத்திரி புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகள் வரிசையில் நின்ற காட்சி
Published on

கோவை:

அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பினர் மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆனால் தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனையடுத்து அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பினர் தமிழகம் முழுவதும் இன்று அரசு ஆஸ்பத்திரிகளில் புற நோயாளிகள் பிரிவை புறக்கணித்து போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் புற நோயாளிகள் பிரிவில் பணியாற்றும் 500 டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் 250 டாக்டர்களில் புறநோயாளிகள் பிரிவில் பணியாற்றும் 100 டாக்டர்கள் இன்று போராட்டம் காரணமாக பணிக்கு வரவில்லை.

இதனால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள புறநோயாளிகள் பிரிவில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. எனவே கூட்டத்தை சமாளித்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயிற்சி டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

இதே போல மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் 10 டாக்டர்களும், பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பிரிவில் பணியாற்றும் 20 டாக்டர்களும் பணிக்கு வரவில்லை. இதனால் அங்கும் புறநோயாளிகள் பிரிவில் கூட்டம் அலைமோதியது. எனவே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயிற்சி டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பிரிவில் பணியாற்றும் 80 டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டத்தில் 75-க்கும் மேற்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் 160-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணியாற்றி வருகிறனர். இங்கு புறநோயாளிகள் பிரிவில் பணியாற்றும் டாக்டர்கள் போராட்டம் காரணமாக பணிக்கு வரவில்லை. எனவே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை சார்பில் பயிற்சி டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

டாக்டர்கள் போராட்டம் காரணமாக நோயாளிகள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், தாராபுரம், பல்லடம், உடுமலை, காங்கயம், அவினாசி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் டாக்டர்கள் 300 பேர் போராட்டம் காரணமாக இன்று பணிக்கு வரவில்லை. இதனால் புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதியது. எனவே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயிற்சி டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். #DoctorsProtest

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com