பரமத்திவேலூர் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்

பரமத்தி வேலூர் அருகே அரசு பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பரமத்திவேலூர் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரிலிருந்து மோகனூர் மற்றும் காட்டுப்புத்தூர் செல்லும் அனைத்து அரசு நகர பஸ்களும் பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு வழியாக சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் சில நகர பஸ்கள் கடந்த சில மாதங்களாக நன்செய் இடையாறு கிராமத்திற்குள் வராமல் பரமத்தி வேலூரிலிருந்து ஓலப்பாளையம் வழியாக சென்று வருவதாக கூறப்படுகிறது.

இதனால் நன்செய் இடையாறில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், மாணவ, மாணவிகள் மற்றும் பல்வேறு பணிக்கு செல்வோர் என பலதரப்பட்ட மக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காட்டுப்புத்தூரிலிருந்து பரமத்தி வேலூர் நோக்கி வந்த அரசு பஸ்சை நன்செய் இடையாரில் பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பரமத்தி வேலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முறையான வழித்தடத்தில் பஸ்சை இயக்க உரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com