

சென்னை:
நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் போராட்டங்களுக்கு ஆதரவாக துண்டு பிரசுரம் விநியோகித்து மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டியதாக கடந்த மாதம் 12-ந்தேதி பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதியை சேலம் காவல்துறையினர் கைது செய்தனர்.
இவருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும், தேச நலனுக்கு எதிராக செயல்பட்டதாகவும் கூறி அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து சேலம் போலீஸ் கமிஷனர் கடந்த மாதம் 17-ந்தேதி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து அவரது தந்தை மாதையன், சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், அரசியல் காரணங்களுக்காக எனது மகளை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். போலீசாரிடம் முறையான அனுமதியை பெற்ற பின்னரே, போராட்டங்களில் ஈடுபட்டார். சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தாத வகையில் போராட்டத்தில் ஈடுபட அரசியல் சாசனத்தில் உரிமை உள்ளது. எனவே வளர்மதியை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்றும் கூறியிருந்தார்.
மேலும், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று மற்றொரு மனுவை அவர் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான விசாரணையை நாளை (வியாழக்கிழமை) விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.