100 கிலோ தங்கம் மோசடியில் தேடப்பட்ட காஞ்சிபுரம் கோவில் குருக்கள் மும்பையில் கைது

காஞ்சிபுரம் கோவிலில் 100 கிலோ தங்கம் மோசடி வழக்கில் தேடப்பட்ட கோவில் குருக்கள் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
மும்பையில் கைதான ராஜப்பா குருக்கள் (அம்பு குறியிட்டு காட்டப்பட்டவர்)
மும்பையில் கைதான ராஜப்பா குருக்கள் (அம்பு குறியிட்டு காட்டப்பட்டவர்)
Published on

கும்பகோணம்:

காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சோமாஸ்கந்தர் சிலை செய்யப்பட்டது. இந்த சிலை செய்ததில் 100 கிலோவுக்கும் மேல் தங்கம் மோசடி செய்யப்பட்டது தெரிய வந்தது. இதில் ஏகாம்பரநாதர் கோவில் குருக்கள் ராஜப்பாவுக்கு (வயது 87) தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து அறநிலையத்துறையினர் கொடுத்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜப்பா குருக்களை தேடி வந்தனர். இதனால் ராஜப்பா குருக்கள் கனடா நாட்டுக்கு தப்பி சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து அனைத்து விமான நிலையங்களுக்கும் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து போலீசார் நோட்டீஸ் அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் ராஜப்பா குருக்கள் கனடா நாட்டில் இருந்து மும்பைக்கு நேற்று முன்தினம் காலையில் வந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த விமான நிலைய போலீசார், ராஜப்பா குருக்களை கைது செய்தனர். பின்னர் அவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ராஜப்பா குருக்களை மும்பையில் இருந்து கும்பகோணத்துக்கு நேற்று முன்தினம் இரவு போலீசார் அழைத்து வந்தனர். இதைத்தொடர்ந்து கும்பகோணத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மாதவராமானுஜர் வீட்டுக்கு ராஜப்பா குருக்களை அழைத்து சென்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி, ராஜப்பா குருக்களை அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், அவரை திருச்சி மத்திய சிறையில் அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com