ராமேசுவரம் கோவில் தங்கத்தேரில் தங்கம் மாயம் - சிலை கடத்தல் தடுப்பு ஐ.ஜி. விசாரிக்க கோரிக்கை

ராமேசுவரம் கோவில் தங்கத்தேரில் தங்கம் மாயமானது. இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு ஐ.ஜி. விசாரிக்க இந்து மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம் கோவிலில் பழுதாகி நிற்கும் தங்கத்தேரை படத்தில் காணலாம்.
ராமேசுவரம் கோவிலில் பழுதாகி நிற்கும் தங்கத்தேரை படத்தில் காணலாம்.
Published on

ராமேசுவரம்:

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் கோவிலில் கடந்த 2000-ம் ஆண்டு புதிதாக தங்கத்தேர் செய்யப் பட்டது. இந்த தேர் சுமார் 18 அரை அடி உயரத்தில் மரத்தால் செய்யப்பட்டு அதன் மீது செம்புத் தகடு பதிக்கப்பட்டு, இறுதியாக அதன் மீது 7 கிலோ எடை தங்கத்தில், தங்கத்தேர் முழுமையாக்கப்பட்டது. அது போல தங்கத்தேரின் சக்கரம் மரத்தால் செய்யப்பட்டிருந்ததால், தேரின் எடை தாங்காமல் ஒரு சில வருடங்களிலேயே சக்கரம் சேதமானது. அதன் பின்பு இரும்பினால் சக்கரம் செய்யப்பட்டது.

கோவிலில் தங்கத்தேரை இழுக்க விரும்பும் பக்தர்கள் ரூ.2 ஆயிரத்தை, கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் செலுத்தி அதற்கான ரசீதை பெற வேண்டும். பின்பு தங்கத்தேரில் அம்பாள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதும், பணம் கட்டிய பக்தர்கள் தங்கத்தேரை கோவிலின் 3-ம் பிரகாரத்தை சுற்றி இழுத்து வரவேண்டும்.

ராமேசுவரம் கோவிலில் பல ஆண்டுகளாக தங்கத்தேர் பழுதாகி, தூசி படிந்து பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. இந்தநிலையில் கோவில் தங்கத்தேரில், தங்கத்தின் எடை குறைந்துள்ளதாகவும், இதனால் தேர் பொழிவிழந்து நிறம் மாறிய நிலையில் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இதையடுத்து திருக்கோவில் அதிகாரிகள் தங்கத்தேரை துணியால் மூடி மறைத்து வைத்துள்ளனர்.

மேலும் பழுதான தங்கத்தேரை சீரமைக்க இந்துஅறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியாமல் இருப்பதாகவும், தங்கதேரில் நடந்துள்ள ஊழலை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் நேரில் வந்து விசாரணை நடத்தி கண்டுபிடிக்க வேண்டும் என்று இந்துமக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.க்கு தபால் மூலமாக கடிதம் அனுப்பியுள்ளார். தங்கத்தேரில் தங்கம் குறைந்துள்ளது பற்றி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.க்கு தபால் அனுப்பியது கோவில் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பழுதான தங்கத் தேரை உடனே சீரமைக்கவும் அல்லது புதிய தங்கத்தேர் செய்து பக்தர்களின் நேர்த்திகடன் செலுத்துவதற்காக இந்து அறநிலையத்துறை ஆணையர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com