

பனாஜி:
கோவா மாநிலத்தில் மத வழிபாட்டுத் தலங்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தெற்கு கோவாவில் நேற்று இரவும் ஒரு கல்லறைத் தோட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர். கடந்த 1-ம் தேதியில் இருந்து இதுவரை 9 புனித பகுதிகள் ஒரு கோவில் தாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கோவா மாநில காங்கிரஸ் தலைவர் சாந்தாராம் நாயக், மாநில டி.ஜி.பி. முக்தேஷ் சந்தரை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாயக், ‘வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த வழக்குகளை நடுநிலையான விசாரணை அமைப்பான சி.பி.ஐ. சிறப்பாக விசாரணை நடத்த முடியும்’ என்றார்.
‘முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்திற்கு காங்கிரஸ் எதிரானதல்ல. ஆனால், இதுபோன்ற தாக்குதல் நடந்தபோது அவர் புறப்பட்டு சென்றதால், அவர் தன்வசம் இருந்த உள்துறை பொறுப்பை எந்த அமைச்சரிடமாவது ஒப்படைத்திருக்க வேண்டும்’ என்றும் நாயக் கூறினார்.