உலக பேட்மிண்டன் போட்டியில் பதக்கத்தின் நிறத்தை மாற்றியது மகிழ்ச்சி - சிந்து பேட்டி

உலக பேட்மிண்டனில் 2 முறை வெண்கலப்பதக்கம் வென்று இருந்தேன். இந்த முறை பதக்கத்தின் நிறத்தை மாற்றி இருப்பது (வெள்ளி) மகிழ்ச்சி அளிப்பதாக இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்
உலக பேட்மிண்டன் போட்டியில் பதக்கத்தின் நிறத்தை மாற்றியது மகிழ்ச்சி - சிந்து பேட்டி
Published on

ஐதராபாத்:

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடந்த உலக பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் கைப்பற்றி அசத்தினார். நாடு திரும்பிய பி.வி.சிந்து ஐதராபாத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்ததும் அதிர்ச்சி அடைந்தேன். ஆனால் அதையே நினைத்து வருத்தப்பட்டு கொண்டு இருக்கவில்லை. தற்போது அந்த விஷயம் முடிந்து விட்டது. மறுநாளே சகஜ நிலைக்கு திரும்பி விட்டேன். ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு சிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்றாகும். ஏற்கனவே உலக பேட்மிண்டனில் 2 முறை வெண்கலப்பதக்கம் வென்று இருந்தேன். இந்த முறை பதக்கத்தின் நிறத்தை மாற்றி இருப்பது (வெள்ளி) மகிழ்ச்சி அளிக்கிறது.

மூன்று செட் வரை நீடித்த இறுதிப்போட்டியில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சோர்வடைந்தேன். என்னை எதிர்த்து ஆடிய ஜப்பான் வீராங்கனை ஒகுஹராவும் சோர்வடைந்து தான் காணப்பட்டார். ஒவ்வொரு புள்ளிக்கும் கடுமையாக போராட வேண்டி இருந்தது. ஆட்டத்தில் எதுவும் நடக்கலாம் என்ற நிலை கடைசி வரை நீடித்தது. மொத்தத்தில் அது எனக்குரிய நாளாக இல்லை’ என்றார். இந்திய அணியின் பயிற்சியாளர் கோபிசந்த் கருத்து தெரிவிக்கையில், ‘22 வயதிலேயே சிந்து பெரிய போட்டிகளில் பதக்கம் வென்று சாதித்துள்ளார். இது தொடரும் என்று நம்புகிறேன்’ என்றார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com