மாணவியை பலாத்காரம் செய்த கல்லூரி ஊழியர் கைது

மயக்க ‘ஸ்பிரே’ அடித்து மாணவியை பலாத்காரம் செய்த கல்லூரி ஊழியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

வேலூர்:

வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது இளம்பெண் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். உடல் நலக்குறைவால் மாணவி கடந்த 16-ந்தேதி வடுகந்தாங்கல் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றார். அங்கு அவரின் உடல்நிலையை டாக்டர்கள் பரிசோதித்தனர். அதில், மாணவி 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர்கள் வேலூர் மாவட்ட சமூகநலத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி பிரியங்கா மற்றும் சமூகநல ஊழியர் சாந்தி ஆகியோர் அங்கு சென்று விசாரித்தனர்.

அதில், கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி கல்லூரிக்கு ரெக்கார்டு நோட்டு கொண்டு வருமாறு தந்தையின் செல்போனில் ஒருவர் தெரிவித்ததாகவும், அதன்பேரில் புறப்பட்டு சென்றபோது கல்லூரி அருகே ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து மர்மநபர் திடீரென முகத்தில் மயக்க ‘ஸ்பிரே’ அடித்தார். கண்விழித்து பார்த்தபோது ஓர் அறையில் நாற்காலியில் அமர்ந்திருந்தேன். அருகே கல்லூரியில் பணிபுரியும் பிரதாப் என்பவர் இருந்தார். அவர் இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டினார். அதனால் எனது பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை என்று மாணவி தெரிவித்தார்.

இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இதில், தொடர்புடைய வேலூர் காகிதப்பட்டறையை சேர்ந்த கல்லூரி ஊழியர் பிரதாப்பை (வயது 26) பிடித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் புனிதா தீவிர விசாரணை நடத்தினார்.

அப்போது அவர், மாணவியின் முகத்தில் மயக்க மருந்து ‘ஸ்பிரே’ அடித்து பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்பு கொண்டார். அதையடுத்து ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் பிரதாப் கைது செய்யப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com