அறந்தாங்கி அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் படுகொலை

அறந்தாங்கி அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
அறந்தாங்கி அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் படுகொலை
Published on

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஆவுடையார்கோவில் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த காளிமுத்து மகன் சக்திவேல் (வயது 32). மது பழக்கத்திற்கு அடிமையான இவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார்.

திருமணமாகாத இவர் அப்பகுதியை சேர்ந்த பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொள்வது, கேலி, கிண்டல் செய்வது என்று இருந்தார். பொதுமக்கள் கடுமையாக எச்சரித்தும் திருந்த வில்லை. இதற்கிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை ஏமாற்றி மறைவான இடத்திற்கு அழைத்து சென்ற சக்திவேல் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதைப்பார்த்த பொதுமக்கள் சக்திவேலை அடித்து, உதைத்து ஆவுடையார்கோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆனால் அவரது உறவினர்கள் வந்து ஒரு சில மணி நேரத்தில் மீண்டும் அழைத்து சென்று விட்டனர். சக்திவேல் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதேபோல் காளிதாஸ் என்பவரது உறவுக்கார சிறுமிக்கும், கடந்த 2008-ம் ஆண்டு காசிவிஸ்வநாதன் என்பவரது உறவுக்கார சிறுமிக்கும் சக்திவேல் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சக்திவேலை கடுமையாக தண்டிக்க தருணம் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு ஆவுடையார்கோவில் அருகே உள்ள அடியார்குளம் பகுதியில் சக்திவேல் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காளிதாஸ், காசிவிஸ்வநாதன் ஆகியோர் மறித்தனர். அவர்களுக்கிடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது.

இதையடுத்து ஆத்திரம் அடைந்த இருவரும் சேர்ந்து சக்திவேலை சரமாரியாக அடித்து, காலால் குரல் வளையை மிதித்தனர். இதில் மூச்சுத்திணறிய சக்திவேல் மயங்கினார். அவர் இறந்து விட்டதாக நினைத்து இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து சக்திவேலை மீட்டு அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட சக்திவேல் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.

இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காசிவிஸ்வநாதனை கைது செய்தனர். தலை மறைவான காளிதாசை தேடி வருகிறார்கள். உறவுக்கார சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக்திவேலை பழி வாங்க 10 ஆண்டுகளாக காத்திருந்ததாகவும், நேற்று இரவு சிக்கிக்கொண்டதால் தாக்கியதாகவும் காசிவிஸ்வ நாதன் போலீசில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் ஆவுடையார் கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com