

விழுப்புரம்:
விழுப்புரம் வழுதரெட்டி பகுதியை சேர்ந்த 13 வயதுடைய சிறுமியை ஆசூரை சேர்ந்த ஏற்கனவே திருமணமான சக்திவேல் (28) என்ற கூலித்தொழிலாளிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரின் குடும்பத்தினரும் திருமணம் செய்து வைத்தனர். இவர்களது திருமணம் முத்தாம்பாளையத்தில் உள்ள ஒரு கோவிலில் நடைபெற்றது.
இதுகுறித்து சிறுமி, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சக்திவேல், சிறுமியின் தந்தை, தாய், சக்திவேலின் தந்தை தனபால், தாய் லட்சுமி, தம்பி ஆறுமுகம், தங்கை செல்வி, ஆறுமுகம் மனைவி தேன்மொழி, உறவினரான எடையம்பட்டை சேர்ந்த தனலட்சுமி ஆகியோர் மீது குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல் மற்றும் சிறுமியின் தாய், தந்தை ஆகியோரை கைது செய்தனர்.