நாட்டின் 28-வது ராணுவ தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் பதவியேற்றார்

நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத்தின் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து, புதிய தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் நரவனே இன்று பதவியேற்றார்.
ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற மனோஜ் முகுந்த் நரவனே
ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற மனோஜ் முகுந்த் நரவனே
Published on

புதுடெல்லி:

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக செயல்பட்டு வந்த பிபின் ராவத்தின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து புதிய ராணுவ தலைமை தளபதியாக நியமிக்கப்பட்ட, லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே இன்று பொறுப்பேற்றார். 

இந்திய ராணுவத்தின் 28-வது தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் நரவனே பொறுப்பேற்றுள்ளார். அவரிடம் பிபின் ராவத், பொறுப்புகளை ஒப்படைத்து, வாழ்த்து தெரிவித்தார். 

ராணுவ தளபதியாக பொறுப்பேற்றுள்ள மனோஜ் முகுந்த் நரவனே, 1980-ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் சீக்கிய லைட் படைப்பிரிவில் தனது ராணுவ சேவையைத் தொடங்கியவர். 

ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நிலவிய கடுமையான சூழ்நிலைகளில், திறம்பட பணியாற்றியவர். ஜம்மு-காஷ்மீரில் ராஷ்டிரிய ரைபிள்ஸ் பட்டாலியனுக்கும், கிழக்குப் பகுதியில் ஒரு தரைப்படைக்கும் கட்டளை அதிகாரியாக பணியாற்றி உள்ளார். 

ராணுவத்தின் துணைத் தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர், இந்தியா-சீனா இடையிலான சுமார் 4000 கி.மீ. எல்லையை கவனிக்கும் இந்திய ராணுவத்தின் கிழக்கு கட்டளை பிரிவுக்கு  தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராணுவ தளபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிபின் ராவத், முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com