குடியிருப்பு பகுதியில் குப்பைக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

ராஜபாளையத்தில் குடியிருப்பு பகுதியில் நகராட்சி சார்பில் குப்பைக்கிடங்கு அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குப்பைக்கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.
குப்பைக்கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.
Published on

ராஜபாளையம்:

ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 41-வது வார்டில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையம் அருகே ரேஷன் கடை, வீடுகள், கடைகள் மற்றும் கோவில்கள் உள்ளது. இதற்கு அருகே உள்ள காலி இடத்தை பொதுமக்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த விளையாட்டு மைதானம் அருகே உள்ள காலி இடத்தில், 2 வார்டுகளில் சேரும் குப்பைகளை சேமித்து வைத்து நகராட்சி பணியாளர்கள் வாரம் ஒரு முறை அவற்றை அகற்றுகின்றனர். சில சமயங்களில் குப்பை வண்டிகளை குப்பைகளுடன் அங்கன்வாடி மையத்திற்கு அருகே நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசி வருவதால் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர் கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குப்பை கழிவுகளில் இருந்து ஒரு பாம்பு, அருகே உள்ள அங்கன்வாடி மையத்திற்குள் புகுந்தது. உடனடியாக குழந்தைகள் வெளியேற்றப்பட்டு மீட்பு குழுவினர் மூலம் பாம்பு மீட்கப்பட்டு ஊருக்கு வெளியே கொண்டு விடப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் குப்பைகளை தேக்கி வைக்க எதிர்ப்பு தெரிவித்து, நகராட்சி ஆணையரிடம் பொது மக்கள் புகார் அளித்தனர். இந்த நிலையில் நேற்று காலை, இப்பகுதிக்கு வந்த நகராட்சி சுகாதார துறையினர் விளையாட்டு மைதானம் இருந்த இடத்தில், குப்பைக்கிடங்கு அமைப்பதற்காக எந்திரம் மூலம் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்து வந்த அப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர், குழி தோண்டும் பணிகளை தடுத்து நிறுத்திபோராட்டம் நடத்தினர்.

இதனால் பொது மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் பணிகளை பாதியிலேயே விட்டுச்சென்றனர். இதுகுறித்து பொன்னகரத்தை சேர்ந்த லட்சுமணன் கூறும்போது, முன் தகவல் அளிக்காமல், நகராட்சி அதிகாரிகள் குப்பை கிடங்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கேட்டதற்கு அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை. பொதுமக்கள் பலர் இணைந்து சமப்படுத்தி உள்ள விளையாட்டு மைதானத்தை சேதப்படுத்தி அதில் குப்பைக்கிடங்கு அமைக்க உள்ளதாக கூறுகின்றனர். குடியிருப்பு பகுதியில் குப்பைகிடங்கு அமைக்காமல் வேறு இடத்தில் மாற்றி அமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com