எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் மேலும் 4 பேர் சிறைப்பிடிப்பு

எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி, விசைப்படகு மற்றும் அதில் இருந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் மேலும் 4 பேர் சிறைப்பிடிப்பு
Published on

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 150-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

நேற்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது குப்புசாமி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் திடீரென எந்திரக்கோளாறு ஏற்பட்டது.

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி, விசைப்படகு மற்றும் அதில் இருந்த சதீஷ், அஜித், தர்மராஜ், ராமச்சந்திரன் ஆகிய 4 மீனவர்களை சிறைப்பிடித்தனர். பின்னர் படகுடன் 4 மீனவர்களையும் காரை நகர் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.

இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஜோசப் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற மீனவர்கள் ரனீசன் (36), ராஜா (34), சேகர் (30), மணிகண்டன் (33) ஆகிய 4 பேர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 4 பேரையும் விசைப்படகுடன் சிறைப் பிடித்தனர். பின்னர் அவர்களை காரைநகர் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.

சிறைப்பிடிக்கப்பட்ட 8 மீனவர்கள் மீதும் இலங்கையின் புதிய சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிகிறது. 8 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டதை அறிந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் அவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com