பெங்களூருவில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பெங்களூருவில் கைது செய்துள்ளனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

பெங்களூரு:

கடந்த 2013-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசந்த், அங்கித் சவான், அஜீத் சண்டிலா ஆகியோர் சூதாட்ட புகாரில் சிக்கினார்கள். டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதேபோல கிரிக்கெட் வாரியமும் நடவடிக்கை எடுத்து இருந்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பி.சி.சி.ஐ.), ஐ.பி.எல். நிர்வாகமும், வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தன. சூதாட்ட தரகர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று பல்வேறு அறிவுரைகளும் பயிற்சி வகுப்பும் வீரர்களுக்கு அளிக்கப்பட்டன.

இதற்கிடையே, ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வரும் 13-வது ஐ.பி.எல். போட்டியில் ஒரு அணியின் வீரரை ஸ்பாட் பிக்சிங் செய்வதற்கான செயல்களில் ஈடுபட சூதாட்ட தரகர் அனுகியதாக தகவல் வெளியானது. 

கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் வீரர்கள் இருப்பதால், அவர்களை யாரும் நெருங்க முடியாது. ஆனால் ஆன்-லைன் மூலம் ஐ.பி.எல். வீரர் ஒருவரை சூதாட்ட தரகர் அனுகியுள்ளார்.  

இதுகுறித்து அந்த வீரர் அனுப்பிய புகாரின் பேரில் பி.சி.சி.ஐ.யின் ஊழல் தடுப்புப் பிரிவு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் சூதாட்ட தரகர்கள் தொடர்பு கொண்ட வீரர் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பெங்களூருவில் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக பெங்களூரு போலீஸ் கமிஷனர் சந்தீப் பாட்டீல் கூறுகையில், பெங்களூருவில் 3 இடங்களில் நடத்திய தேடுதல் வேட்டையில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 4.91 லட்சம் ரூபாய் பணமும், 6 மொபைல் போன்களும் பறிமுதல் செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com