

மகாராஷ்டிர மாநிலம் வார்தா மாவட்டம் புல்கான் நகரில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஆயுதக் கிடங்கு உள்ளது. இங்கு ஏராளமான ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், வெடிபொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதன் அருகே உள்ள காலி மைதானத்தில், பயன்படுத்தப்படாத காலாவதியான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை செயலிழக்கச் செய்யும் பணி நடைபெறுகிறது. இந்த பணியை வெடிமருந்து தொழிற்சாலை மேற்கொண்டு வருகிறது.
இன்று காலையில் அந்த பகுதிக்கு கொண்டு வரப்பட்ட வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களை வாகனத்தில் இருந்து இறக்கும்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. வெடிமருந்துகள் வெடித்துச் சிதறியதில், வெடிமருந்து தொழிற்சாலை ஊழியர், இரண்டு கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். 10 பேர் பலத்த காயமடைந்தனர்.