ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மருத்துவமனையில் அனுமதி

ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி உடல் நலக்குறைவால் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ஆசிப் அலி சர்தாரி. இவர், பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரான பெனாசீர் பூட்டோவின் கணவர் ஆவார்.

ஆசிப் அலி சர்தாரி, தனது பதவி காலத்தில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அந்நாட்டு தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு விசாரணை நடத்தியது.

இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி தேசிய பொறுப்புடைமை குழு அதிகாரிகள் ஆசிப் அலி சர்தாரியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதனை தொடர்ந்து, அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.உடல் நலக்குறைவால் அவதிப்படும் தனது தந்தைக்கு, சிறையில் போதுமான மருத்துவ உதவிகளை செய்ய இம்ரான்கான் அரசு மறுத்துவருவதாக ஆசிப் அலி சர்தாரியின் மகன் பிலாவால் பூட்டோ குற்றம் சாட்டினார்.இந்த நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக ஆசிப் அலி சர்தாரி, தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். சிறையில் இருந்து ஆம்புல்ன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், இருதய சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதையொட்டி மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com