3 மாதங்களாக தலைமறைவாக இருந்த பீகார் முன்னாள் மந்திரி மஞ்சு வர்மா சரணடைந்தார்

பீகார் மாநிலம் முசாபர்பூர் காப்பகத்தில் சுமார் 30 சிறுமிகள் சீரழிக்கப்பட்டது தொடர்பாக பதவி விலகிய முன்னாள் மந்திரி மஞ்சு வர்மா இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார். #ManjuVerma #ManjuVermasurrenders
3 மாதங்களாக தலைமறைவாக இருந்த பீகார் முன்னாள் மந்திரி மஞ்சு வர்மா சரணடைந்தார்
Published on

பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த சுமார் 30 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் சமீபத்தில்  நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இவ்விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில் காப்பகத்தின் பொறுப்பாளர் பிரஜேஷ் தாக்கூர் உள்பட 17 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறுமிகள் சீரழிக்கப்பட்ட பாதுகாப்பு இல்லத்திற்கு பீகார் மாநில சமூக நலத்துறை மந்திரி மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மா அடிக்கடி சென்று வந்ததாகவும், அதனால் பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்திரசேகர்  வர்மாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனால் மஞ்சு வர்மா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.

இதைதொடர்ந்து, தலைமறைவாக இருந்த மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மாவின் வீட்டை போலீசார் சோதனையிட்டபோது அனுமதி பெறாத கள்ளத்துப்பாக்கிகள் மஞ்சு சர்மா வீட்டில் கிடைத்தன. இதன் அடிப்படையில் கணவன் - மனைவி இருவருக்கும் எதிராக ஆயுதங்கள் சட்டத்தின்கீழ் சி.பி.ஐ. அதிகாரிகள் தனியாக வழக்குப் பதிவு செய்தனர். இவ்விவகாரத்தை சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்த தொடங்கியது.

இதனால் தன்னை இந்த வழக்கில் கைது செய்யாமல் இருக்க பாட்னா உயர் நீதிமன்றத்தில் மஞ்சு வர்மா முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை  நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து போலீசார் கையில் பிடிபடாமல் தலைமறைவாக இருந்த மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மா கடந்த மாதம் பேகுசராய் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எம்.பி.லோக்குர், எஸ்.அப்துல் நசீர் மற்றும் தீபக் குப்தா ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் விசாரணைக்கு வந்தது.

பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இவ்வழக்கின் முக்கிய குற்றவாளி ரஜேஷ் தாக்கூர் சிறைக்குள் கைபேசி வைத்திருந்ததாக சி.பி.ஐ. அதிகாரிகள் குறிப்பிட்டதையடுத்து, பிரஜேஷ் தாக்கூரை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாதுகாப்பு நிறைந்த பாட்டியாலா சிறைக்கு உடனடியாக மாற்றுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், முன்னாள் மந்திரி மஞ்சு வர்மா மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய தவறியதற்காக பீகார் அரசுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அவர் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு தள்ளுபடியான நிலையில் இன்னும் மஞ்சு வர்மாவை கைது செய்யாதது ஏன்? என பீகார் மாநில அரசின் சார்பில் வாதாடும் வழக்கறிஞருக்கு கேள்வி எழுப்பினர்.

மஞ்சு வர்மா முன்னாள் மந்திரியாக இருக்கலாம். ஆனால், அவர் என்ன சட்டத்தை விட உயர்ந்தவரா? இன்னும் அவரை கைது செய்யாதது ஏன்? இவ்வளவு நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? எனவும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், சுமார் 3 மாதங்களாக போலீசார் கண்ணில் சிக்காமல் இருந்த மஞ்சு வர்மா பேகுசராய் மாவட்டத்தில் உள்ள மஞ்ஹவுல் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். யாரும் தன்னை அடையாளம் காணாமல் இருப்பதற்காக முகத்தை துப்பட்டாவால் மறைத்தவாறு நீதிமன்றத்துக்குள் நுழைந்த அவர் நீதிபதியிடம் சரண் அடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். #ManjuVerma #ManjuVermasurrenders

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com