விமான போக்குவரத்து முறைகேடு- அமலாக்கத்துறை விசாரணைக்கு 2-வது நாளாக பிரபுல் பட்டேல் ஆஜர்

விமான போக்குவரத்து முறைகேடு தொடர்பான வழக்கின் விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் பிரபுல் பட்டேல் 2-வது நாளாக இன்றும் ஆஜராகினார்.
விமான போக்குவரத்து முறைகேடு- அமலாக்கத்துறை விசாரணைக்கு 2-வது நாளாக பிரபுல் பட்டேல் ஆஜர்
Published on

புதுடெல்லி:

மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது விமான போக்குவரத்து மந்திரியாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரபுல் பட்டேல் இருந்தார். அப்போது பல்வேறு வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு லாபகரமான வழித்தடங்கள் மற்றும் குறிப்பிட்ட நேரங்கள் வழங்கப்பட்டது. இதனால் அரசு நிறுவனமான ஏர் இந்தியாவுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து இடைத்தரகராக செயல்பட்ட தீபக் தல்வாரை கைது செய்தனர்.

தீபக் தல்வார் அப்போதைய மத்திய மந்திரி பிரபுல் பட்டேலுடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் பிரபுல் பட்டேலிடம் விசாரணை நடத்த இருப்பதாகவும் தெரிவித்த அமலாக்கத்துறை, பிரபுல் பட்டேல் மே 6-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் சொந்த காரணங்களால் ஆஜராக முடியவில்லை என்றும், ஆஜராவதற்கு வேறு தேதியை ஒதுக்கவும் அவர் அமலாக்கத்துறையிடம் கோரிக்கை வைத்திருந்தார். இதனை ஏற்ற அமலாக்கத்துறை அவரை வேறு தேதியில் ஆஜராக அனுமதி அளித்தது.

இதனையடுத்து, டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் பிரபுல் பட்டேல் நேற்று முதன்முறையாக விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சுமார் 8 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. 

இந்நிலையில், இன்று 2-வது நாளாக பிரபுல் பட்டேல் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையின் போது அவர் அளித்த வாக்குமூலங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிவு செய்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com