

சென்னை:
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.
மருத்துவ குழுவினரிடமும், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, அவருடைய கணவர் மாதவன், சகோதரர் தீபக் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தமிழக அரசின் சிறப்பு செயலாளராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் தலைமை செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ் ஆகியோரிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டது.
அதன் பேரில் ஷீலா பாலகிருஷ்ணன் நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் நேற்று ஆஜராகி அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். 4 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் ஜெயலலிதா மரணம் குறித்து வழக்கு தொடர்ந்த ஜோசப் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.
இன்று காலை (வியாழக்கிழமை) முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.
அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேள்வி கேட்டனர். மருத்துவமனையில் ஜெயலலிதாவை தாங்கள் பார்த்தீர்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்ட நீதிபதியிடம் ராம்மோகன் ராவ் விளக்கம் அளித்தார். அரசு வக்கீலும் அவரிடம் குறுக்கு விசாரணை நடத்தினார்.