காயத்துடன் கிராமத்திற்குள் வந்த குட்டி யானைக்கு தொடர்ந்து சிகிச்சை

காயத்துடன் கிராமத்திற்குள் வந்த குட்டி யானைக்கு வனத்துறையினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். அந்த குட்டி யானையை அதன் தாயுடன் சேர்க்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
வனத்துறைக்கு சொந்தமான பங்களா அருகே சுற்றி திரிந்த குட்டி யானையுடன் வனத்துறையினர்.
வனத்துறைக்கு சொந்தமான பங்களா அருகே சுற்றி திரிந்த குட்டி யானையுடன் வனத்துறையினர்.
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தடிக்கல் கிராமத்திற்குள் கடந்த 26-ந் தேதி ஒரு வயதுடைய குட்டி யானை வந்தது. காலில் காயத்துடன் இருந்த அந்த பெண் யானையை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து காட்டிற்குள் விட்டனர்.

அந்த குட்டி யானை, தாய் மற்றும் அதன் கூட்டத்துடன் சேர்ந்து கொண்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை குட்டி யானை அருகில் உள்ள அரசச்சூர் என்ற கிராமத்திற்கு வந்தது. உடனே வன ஊழியர்கள் அங்கு சென்று குட்டி யானையை மீட்டனர்.

அந்த குட்டி யானையை மற்ற யானைகள் தங்களுடன் சேர்க்காததால், அது மீண்டும் கிராமத்திற்குள் வந்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது அய்யூரில் உள்ள வனத்துறை பங்களாவில் யானையை வனத்துறையினர் பராமரித்து வருகிறார்கள். இதற்கு தினமும் காலை மற்றும் மாலை 5 லிட்டர் பால் கொடுக்கப்படுகிறது. மேலும் தென்னை ஓலை குருத்து, பலா, மாம்பழங்கள் கொடுக்கப்படுகிறது.

மேலும், அதன் கால் பகுதியில் உள்ள காயத்துக்கு கால்நடை மருத்துவர்கள் மூலமாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அந்த குட்டி யானையை அதன் தாயுடன் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com