மாமல்லபுரத்தில் ஆட்டோவை தானாக ஓட்டி மகிழ்ந்த வெளிநாட்டு பயணிகள்

மாமல்லபுரத்தில் வெளிநாட்டு பயணிகள் தாங்கள் செல்லும் இடங்களுக்கு வாகனங்களை தாங்களே ஓட்டிச் சென்று மகிழ்ந்தனர்.
மாமல்லபுரத்தில் ஆட்டோவை தானாக ஓட்டி மகிழ்ந்த வெளிநாட்டு பயணிகள்
Published on

மாமல்லபுரம்:

தமிழகத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் மற்றும் புரதான சின்னங்களை பார்க்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக சென்னையில் மெரினா கடற்கரை, மாமல்லபுரம் கடற்கரை கோவில் உள்ளிட்ட இடங்களை காண வெளிநாட்டினர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் அவர்கள் தாங்கள் செல்லும் இடங்களுக்கு வாகனங்களை தாங்களே ஓட்டிச் செல்லவும் விரும்பி வந்தனர். இதற்கு சென்னை கீழ்பாக்கத்தில் இயங்கி வரும் சேலஞ் அமைப்பினர் உதவி செய்து வருகிறார்கள். இன்டர்நே‌ஷனல் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவர்களுக்கு அவர்கள் ஆட்டோ ஓட்ட பயிற்சி கொடுக்கிறார்கள்.

பின்னர் ஒரு ஆட்டோவில் 2 பயணிகள் மட்டும் செல்ல அனுமதித்து ஆட்டோ வழங்கப்படுகிறது. ஒரு வாரத்தில் 950 கி.மீட்டர் ஆட்டோ ஓட்டி பயணிக்க அனுமதி அளிக்கிறார்கள். அந்த ஆட்டோவை வெளிநாட்டு பயணிகளே ஓட்டி தாங்கள் செல்லும் இடங்களுக்கு சென்று வருகிறார்கள்.

சென்னையில் இருந்து புறப்படும் அவர்கள் மெரினா கடற்கரை, மாமல்லபுரம், புதுச்சேரி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, ஏற்காடு உள்ளிட்ட இடங்களை பார்த்த பின்னர் மீண்டும் சென்னை திரும்புகின்றனர்.

இந்த பயணத்துக்கு “ரிச்சா சேலஞ்” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதில் பயணம் செய்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூறும்போது, “இந்த ஆட்டோ பயணம் திரில்லாகவும், போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் சுற்றுலா செல்லும் அனுபவம் கிடைத்தது. இதனை நாங்கள் விரும்புகிறோம். ஐரோப்பா நாடுகளில் பிரபலமான இந்த ஆட்டோ சுற்றுலா இப்போது தமிழ்நாட்டிலும் பிரபலமாகிறது” என்றனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் செல்லும் ஆட்டோவில் ஜி.பி.ஆர்.எஸ். கருவி மற்றும் நவீன கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com