

சென்னை:
டி.டி.வி.தினகரன் மீது சென்னை எழும்பூர் 2-வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் இரண்டு அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. மத்திய அரசின் அமலாக்கப்பிரிவினர் இந்த வழக்குகளை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்குகளில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, சாட்சிகள் விசாரணை நடந்தது.
இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு, இந்த வழக்குகளில் குற்றச்சாட்டுகளை புதிதாக பதிவு செய்து, 3 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு எழும்பூர் மாஜிஸ்திரேட்டு மலர்மதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை ஆகஸ்டு 1-ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளதாகவும், அன்றைய தினம் குற்றச்சாட்டுகள் புதிதாக பதிவு செய்யப்படும் என்றும், டி.டி.வி.தினகரன் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட்டு மலர்மதி உத்தரவிட்டார்.