

புதுடெல்லி:
மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு முதலீட்டுக்கான அனுமதி வழங்கிய விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் லஞ்சம் வாங்கினார் என்று சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
மேலும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறி அவரை தேடப்படும் நபராக அறிவித்து ‘லுக்அவுட்’நோட்டீஸ் பிறப்பித்தது. சென்னை ஐகோர்ட்டில் கார்த்திசிதம்பரம் தடை உத்தரவு பெற்றார். அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு ‘லுக்அவுட்’ நோட்டீசுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும் அவர் விசாரனைக்காக சி.பி.ஐ. முன்பு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து கடந்த 23-ந் தேதி டெல்லியில் உள்ள ஐ.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜரானார்.
அவரிடம் சி.பி.ஐ. போலீசார் 8 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் இன்று 2-வது நாளாக ஆஜராகும்படி உத்தவிடப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து இன்று 2-வது முறையாக டெல்லி சி.பி.ஐ. முன்பு கார்த்தி சிதம்பரம் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.