

சேலம்:
மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி ஷ்ரம்யோகிமான்தன் என்ற பெயரில் அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் 60 வயதை கடந்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை நேற்று வழங்கப்பட்டது.
இந்த திட்டத்தை வரவேற்று பா.ஜனதா தொழிற்சங்கத்தின் மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பில் ஒரு பிளக்ஸ்போர்டு கலெக்டர் அலுவலகம் அருகில் வைக்கப்பட்டது. அதில் ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கும், தொழிற்சங்க மாநில தலைவர் பாண்டித்துரை உள்பட பலருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இந்த பிளக்ஸ் போர்டில் தாமரை சின்னம், பிரதமர் மோடி, தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தர்ராஜன், தொழிற்சங்க தலைவர் பாண்டித்துரை, கோட்ட இணை பொறுப்பாளர் அண்ணாதுரை, மாநகர் மாவட்ட தலைவர் கோபிநாத் ஆகியோரின் படமும், பேனரின் கீழ் பகுதியில் சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி படமும் இடம்பெற்றிருந்தது.
அதன் அருகில் தொழிலாளர்களின் பிரச்சினை என்றால் உடனடியாக தீர்த்து வைக்கின்ற சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை சமர்பிக்கிறோம் என்றும் அதில் அச்சிடப்பட்டிருந்தது. இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்களும் அதிர்ச்சியுடன் பார்த்து சென்றனர்.
இந்த தகவல் அரசு அதிகாரிகள் மூலம் கலெக்டருக்கும் தெரிவிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் பேனரை வைத்த பா.ஜனதா கட்சியினரே அந்த பேனரை எடுத்து சென்றனர். இது குறித்து அரசு அதிகாரி ஒருவர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் பேனரின் அடிப்பகுதியில் இருந்த பா.ஜனதா மின் வாரிய பிரிவின் மாநில தலைவர் சேலம் ராஜூ மற்றும் சேலம் மின் திட்ட செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் மீது அனுமதியின்றி பேனர் வைத்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பா.ஜனதாவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews