சாலை தடுப்பை இழுத்தபடியே மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற 5 வாலிபர்கள் கைது

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சாலை தடுப்பை இழுத்தபடியே மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 5 வாலிபர்களை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
சாலை தடுப்பை இழுத்தபடியே மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற 5 வாலிபர்கள் கைது
Published on

சென்னை:

சென்னையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடும் வாலிபர்கள் மின்னல் வேகத்தில் செல்வது வாடிக்கையாகி விட்டது. வாகன நெரிசல், நடந்து செல்பவர்கள் என யாரையும் பொருட்படுத்தாமல் கண்ணை மூடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் குறுக்கும் நெடுக்குமாக அச்சுறுத்தும் வகையில் இவர்கள் பயணிப்பது வழக்கம். போலீசார் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டும், பைக்ரேசில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த முடிவதில்லை.

இதற்கிடையே, சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, மெரினா கடற்கரை - கோட்டூர்புரம் ஆகிய 2 இடங்களில் இதுபோன்ற சம்பவங்களில் இளைஞர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.

சாலை தடுப்பை இழுத்துக் கொண்டே மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்வதை பின்னால் இருந்து அந்த வாலிபர்களின் நண்பர்களே செல்போனில் படம் பிடித்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவியது.

இந்த வீடியோ உயர் போலீஸ் அதிகாரிகளின் செல்போனிலும் பரவியது. இதைப்பார்த்த அவர்கள், பைக் ரேசில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்கும் பணியில் போக்குவரத்து போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.

இந்நிலையில், சாலை தடுப்பை இழுத்துச் சென்று பைக் ரேசில் ஈடுபட்ட பீட்டர் என்ற இளைஞர் உட்பட 5 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இத்துடன் பீட்டர் மன்னிப்பு கேட்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் மீது பொதுச் சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com