

அரவக்குறிச்சி:
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் இருந்து சென்னை உள்பட வெளியூர்களுக்கு இ-பாஸ் மூலம் வெளியூர்களுக்கு அழைத்து செல்வதாக சமூகவலைத்தளத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக விசாரணை நடந்த கலெக்டர் அன்பழகன் உத்தரவிட்டார். அதன்பேரில் கிராமநிர்வாக அலுவலரின் உதவியாளர் சம்பந்தப்பட்ட டிராவல்ஸ்சின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சென்னை செல்ல வேண்டும் என கேட்டுள்ளார்.
அப்போது, ரூ.2 ஆயிரம் பெற்றுக் கொண்ட டிராவல்ஸ் ஓட்டுனர் இ-பாஸ் இல்லாமல் அவரை சென்னைக்கு அழைத்து செல்ல முயன்றுள்ளார். இது தொடர்பாக கிராமநிர்வாக அதிகாரியின் உதவியாளர் கொடுத்த தகவலின் பேரில் அரவக்குறிச்சி போலீசார் அந்த வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் இது தொடர்பாக கோட்டாட்சியர் பாலசுப்பிரமணி நேரில் வந்து அரவக்குறிச்சியை அடுத்த பள்ளப்பட்டி தனியார் டிராவல்ஸ் உரிமையாளர் தமீம் (வயது 27) மற்றும் கார் ஓட்டுனர் நெல்லையை சேர்ந்த வெங்கடேஷ் (23) ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையில், பள்ளப்பட்டியில் இருந்து பாலக்காட்டிற்கு இ-பாஸ் பெற்ற இவர்கள் ஒரே இ-பாசை வைத்துக்கொண்டு பாலக் காட்டிலிருந்து பள்ளப்பட்டி, பள்ளப்பட்டி இருந்து சென்னை என்று போலி இ- பாஸ் பயன்படுத்தி பயணம் சென்று வந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இ- பாஸ் மூலம் சென்னை அழைத்துச் செல்லப்படும் என்பது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் தவறுதலாக தகவல் பரப்பியது, போலி இ-பாஸ் பயன்படுத்தி சென்னை செல்ல முயன்றது என 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு கோட்டாட்சியர் பாலசுப்பிரமணி உத்தரவிட்டார். அதன்படி இ-பாஸ் இல்லாமல் காரில் பயணம் செய்த பள்ளப்பட்டியைச் சேர்ந்த இக்பால், சகீல், காஜாமைதீன், டிராவல்ஸ் உரிமையாளர் தமீம், கார் டிரைவர் வெங்கடேஷ் ஆகியோரை அரவக்குறிச்சி போலீசார் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர்.