மாமல்லபுரம் கடற்கரையில் சீனமொழியில் அச்சிடப்பட்டு டிரம்மில் ரூ.100 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள்

சீனமொழியில் அச்சிடப்பட்டு டிரம்மில் ரூ.100 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள், மாமல்லபுரம் அருகே கொக்கிலமேடு கடற்கரையில் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாமல்லபுரம் அருகே டிரம்மில் அடைக்கப்பட்டு கடற்கரையில் ஒதுங்கிய போதை பொருட்களை படத்தில் காணலாம்.
மாமல்லபுரம் அருகே டிரம்மில் அடைக்கப்பட்டு கடற்கரையில் ஒதுங்கிய போதை பொருட்களை படத்தில் காணலாம்.
Published on

மாமல்லபுரம்:

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள கொக்கிலமேடு கடற்கரையில் நேற்று சீலிடப்பட்ட தகர டிரம் ஒன்று கரை ஒதுங்கியது. அங்கிருந்த மீனவர்கள் அதை உடைத்து பார்த்தனர். அதன்உள்ளே 78 பொட்டலங்கள் இருந்தன. இது குறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக கடலோர காவல் படை போலீஸ் சூப்பிரண்டு சின்னசாமி, மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் முனியசாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று கரை ஒதுங்கிய டிரம்மில் இருந்த 78 பொட்டலங்களை கைப்பற்றினர்.

அந்த பொட்டலத்தின் மேல் “ரீபைன்ட் சைனீஸ் டீ” என சீன மொழியிலும், ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டு இருந்தது. ஒரு பொட்டலத்தை பிரித்து சோதனை செய்தனர்.

அதுபோதை பொருளாக இருக்கும் என சந்தேகம் அடைந்த கடலோர காவல் படை போலீசார் 78 பொட்டலங்களையும் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வு பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் அது ஹெராயின் வகையை சேர்ந்த ‘மெத்தாம்பிடைமின்’ என்ற ஒரு வகை போதை பொருள் என்பது தெரிந்தது.

இதை தண்ணீரில் கலந்து ஊசி மூலமாக உடலில் செலுத்தியும், சாப்பிட்டும், பவுடராக்கி சுவாசித்தும் போதை ஏற்றி கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. 78 கிலோ மதிப்புள்ள இந்த போதை பொருட்களின் மதிப்பு ரூ.100 கோடி என்று போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் வருவதற்குள் டிரம்மை உடைத்து பார்த்த சில மீனவர்களை சந்தேகத்தின்பேரில் போலீசார் அழைத்து விசாரித்தனர். அதற்குமீனவர்கள், டீசல் அல்லது பெட்ரோல் நிரப்பப்பட்ட டிரம் என நினைத்து அதை உடைத்து பார்த்ததாக தெரிவித்தனர்.

கடலில் ஏதாவது மர்ம பொருள் மிதந்து வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். போலீசார் வருவதற்குள் அதனை திறந்து பார்க்ககூடாது என்றும் அறிவுரை வழங்கினர்.

மேலும் மர்மநபர்கள் யாராவது படகில் கடத்தி வந்து இந்த போதை பொருட்களை வீசிவிட்டு சென்றனரா? என்ற சந்தேகத்தில், மர்மநபர்கள் யாராவது நடமாடுகிறார்களா? என அந்த கடற்கரை பகுதியில் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com