புயல் எச்சரிக்கை, தடைகாலம் - மீன்கள் வரத்து குறைந்ததால் விலை பல மடங்கு உயர்வு

புயல் எச்சரிக்கை, தடைகாலம் காரணமாக மீன்கள் வரத்து குறைந்ததால், மீன்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
புயல் எச்சரிக்கை, தடைகாலம் - மீன்கள் வரத்து குறைந்ததால் விலை பல மடங்கு உயர்வு
Published on

நாகர்கோவில்:

கிழக்கு கடற்கரை பகுதியில் தற்போது மீன்கள் இனப்பெருக்க காலம் என்பதால் விசைப்படகு மூலம் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதனால் குமரி மாவட்டத்தின் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்களது விசைப்படகுகள் சின்னமுட்டம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

கட்டுமரம், வள்ளம் போன்றவை மூலம் கடலுக்கு செல்லும் மீனவர்கள் மட்டும் மீன்பிடித்து வந்ததால் மீன்களின் வரத்து குறைந்தது. இந்த நிலையில் பானி புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன் காரணமாக வள்ளம், கட்டுமரம் மீனவர்களும் கடந்த 2 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை.

முற்றிலுமாக மீன்பிடி தடைபட்டதால் குமரி மாவட்டத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுகளுக்கு மீன் வரத்து மிகவும் குறைந்துவிட்டது. நாகர்கோவிலில் வடசேரி, கணேசபுரம், பார்வதிபுரம் உள்பட பல இடங்களில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த மார்க்கெட்டுகளுக்கு குறைந்த அளவே மீன் விற்பனைக்கு வருகிறது.

அதேசமயம் மீன்களின் தேவை அதிகமாக இருப்பதால் மீன்களின் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது. குறிப்பாக நெய் மீன் கிலோ ரூ.800-ல் இருந்து ரூ.1200 ஆக உயர்ந்து உள்ளது. அதே சமயம் நெய்மீன் போதுமான அளவும் கிடைப்பது இல்லை.

ரூ.400-க்கு விற்பனையான பாறை வகை மீன் தற்போது ரூ.700-க்கு விற்பனையாகிறது. ரூ.10-க்கு 5 சாளை மீன்கள் விற்கப்பட்டது. தற்போது ரூ.20-ஆக உயர்ந்து உள்ளது. ஒரு கூறு நெத்திலி மீன் ரூ.20-ல் இருந்து 50 ஆகி விட்டது. விளமீன் கிலோ ரூ.180 முதல் ரூ.200 வரை விற்பனையானது. தற்போது கிலோ ரூ.300-ஆக உள்ளது.

விலை உயர்வு ஒருபக்கம் இருந்தாலும் போதுமான மீன்கள் கிடைக்காததால் மீன் வாங்க வரும் பலரும் ஏமாற்றமடைந்து செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com