2-வது மனைவியை கொலை செய்த மீன் வியாபாரிக்கு ஆயுள் தண்டனை

2-வது மனைவியை கொலை செய்த மீன் வியாபாரிக்கு தஞ்சை மகிளா கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழகியது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தஞ்சாவூர்:

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டையை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது45). மீன் வியாபாரி. இவருக்கு முதல் மனைவி மூலம் 3 குழந்தைகள் உள்ளனர். முதல் மனைவி இறந்துவிட்டதால் தஞ்சை மாவட்டம் பூதலூர் வடக்கு அம்பலக்காரத் தெருவை சேர்ந்த விஜயலட்சுமியை(32) கடந்த 2011-ம் ஆண்டு 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக கணவருடன் கோபித்துக்கொண்டு விஜயலட்சுமி பூதலூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். அங்கு அவர், சகோதரர் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் மனைவியை அழைத்து செல்வதற்காக பலமுறை தங்கராஜ் பூதலூருக்கு வந்தார். ஆனால் செல்ல விஜயலட்சுமி மறுத்துவிட்டார். கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 27-ந் தேதி மனைவியை அழைத்து செல்வதற்காக தங்கராஜ் சென்றார். அங்கு தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி விஜயலட்சுமியை அவரது கணவர் அழைத்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த தங்கராஜ் , கத்தியை எடுத்து விஜயலட்சுமியை குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்து பூதலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராஜை கைது செய்தனர். பின்னர் அவரை, தஞ்சை மகிளா கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி வழக்கு தொர்ந்தனர். வழக்கை நீதிபதி எழிலரசி விசாரித்து வந்தார். அரசு தரப்பில் வக்கீல் தேன்மொழி ஆஜராகி வாதாடினார்.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், 2-வது மனைவியை கொலை செய்த தங்கராஜிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com